சென்னை: சென்னை கொரட்டூர் ஏரி சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் தண்ணீர் கடந்த 1950க்கு முன்பு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் பட்டரவாக்கம், அம்பத்தூர், ஆத்திப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட கழிவு நீர் ஏரி கலந்ததால், தண்ணீர் மாசடைந்தது. இதனால், அந்த ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஏரியில் குப்பை கொட்ட தொடங்கியதால் கொரட்டூர் ஏரி குப்பை மேடாக காட்சியளித்தது. இந்த நிலையில் கடந்த 2016ல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் நீரின்றி வறண்டன. இதனால், மக்களின் தேவைகளுக்காக விவசாய கிணறுகள், கல்குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி, சுத்திகரித்து மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டது.