கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி பொதுநல வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை அடுத்து, கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு, கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி அறிவித்தது. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், மாநிலங்களில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண உதவிகளை வழங்குவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேரிடர் அறிவிப்பு வெளியிட்ட 45 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என, இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 487 நாட்கள் கடந்து விட்ட நிலையில், தொற்றால் பாதித்து பலியானவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அடையாளம் கண்டு, உரிய உதவிகளை வழங்கவில்லை.

பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாயும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக 60 நாட்கள் வரை வழங்க வேண்டும். கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 487 நாட்கள் கடந்த பிறகும், நிவாரண உதவிகள் ஏதும் வழங்கப்படவிடல்லை என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அடையாளம் கண்டு, விதிகளின்படி உரிய நிவாரணத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories: