நடிகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. சினிமா துணை நடிகை. இவர், ஒரு குப்பையின் கதை உள்ளிட்ட  திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் எதிர்வீட்டின் மதில்சுவர் மீது ஏறி வாலிபர்கள் சிலர் புறாவை பிடிக்க முயன்றனர். இதை பார்த்த பாண்டி லட்சுமி அந்த வாலிபர்களிடம் தகராறு செய்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் துணை நடிகையை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வீட்டின் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘துணை நடிகை பாண்டி லட்சுமி பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்களிடம் தகராறு செய்து வருகிறார். அவரது வீட்டில் சினிமா பயிற்சி என்ற பெயரில் எப்போதும் அதிகமான சத்தத்துடன் கூத்தும் கும்மாளமும் தான் நடக்கிறது. எனவே, துணை நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.  இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக வளசரவாக்கம் போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்பவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: