எதிர்காலத்தில் கொரோனாவுக்காக மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எதிர்காலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநர் 10 லட்ச ரூபாய்  நிதி வழங்கியதற்கும், தமிழக அரசு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் விடுவித்ததற்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். தெருவிலங்குகளின் பாதுகாப்பிற்கும், நாய்களுக்கான கருத்தடை நடைமுறையையும் மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கும் திட்டம் வகுக்க வேண்டும்.

 தனியார் மூலம் யானைகள் வளர்ப்பதை முழுமையாக தடை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றம் பரிசீலிக்கும். அதுவரை அவை கண்ணியமாகவும், மனிதாபிமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  எதிர்வரும் நாட்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அப்போது தெரு விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: