மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 12.94% ஆக உயர்வு : அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து!!

டெல்லி : இந்தியாவில் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்க அளவீடு மே மாதத்தில் 12.94% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பணவீக்க அளவீடு 10.5% ஆக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கமும் 37.6% ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் எரிபொருள் பணவீக்கம் 9.75% உயர்ந்தது. ஆனால் மே மாதத்தில் இது 4 மடங்கு உயர்ந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்து நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.மொத்த சந்தை உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.11% உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் அல்லாதவைகளின் பணவீக்கம் உயர்ந்து காணப்படுவது மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் உள்நாட்டு எரிபொருள்கள் விலை உயர்வு போன்றவை இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட காரணமாக அமையும்.

Related Stories: