கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவேண்டும்; ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்ரல் மாதம் விற்கப்பட்ட, மணல், ஜல்லி, கம்பியின் விலை, இந்த ஜூன் மாதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 370 ரூபாய்க்கு விற்ற சிமென்ட் தற்போது 520 ரூபாய்க்கும் எம்.சாண்ட் ஒரு யூனிட் 5000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாகவும் ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 3,400 ரூபாயில் இருந்து 3,900 ரூபாயாகவும் கட்டுமான கம்பி ஒரு டன் 68 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஒரு லோடு செங்கல் 18 ஆயிரத்தில் இருந்து 24 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வால் சிறிய, பெரிய கட்டுமான நிறுவனங்களும் சொந்தமாக வீடுகட்டுபவர்களும் தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்துள்ளனர்.

கொத்தனார், சிற்றாள், கம்பிகட்டுனர், உதவியாளர்கள், போன்றோர் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கட்டுமான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பேசி நிர்ணயம் செய்த விலைக்கு விற்க முடியாமலும் குறித்த நேரத்தில் வீடுகளை கொடுக்க முடியாமலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண மக்களும் விலையேற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தமிழக அரசு உடனடியாக கட்டுமான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: