திருமாவளவன் குறித்து விமர்சனம் நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இவர், கடந்த 2019ம் ஆண்டு இந்து கோயில்களின் அமைப்புகள் குறித்து, ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இது இந்து கோயில்களுக்கு எதிராக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம். தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், இந்துக்கள் திருமாவளவனுக்கு புடவை அனுப்புங்கள்,  திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னிடம் இந்துக்கள் குறித்து பேச சொல்லுங்கள் என்று பல கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனைதொடர்ந்து காயத்ரி ரகுராமிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் அவதூறு கருத்துகளை டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். இது அவருக்கு களங்கம் ஏற்படுத்தம் வகையில் உள்ளது. எனவே நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி, வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: