சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கான விண்ணப்பம் வரவேற்பு: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: சுதந்திர தினத்தன்று சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க சென்னை கலெக்டர் சீதாலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் விருது  வழங்கப்பட உள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ரூ..50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருதிற்காக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி (1.4.2021) 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதேபோல் கடந்த மார்ச் 31ம் தேதி (31.3.2021) 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். கடந்தநிதியாண்டில் (2020-2021) அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் பல்கலைகழகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, மதிப்பு இந்த விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைய தளமான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 30ம் தேதி மாலை 5 மணிவரை இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: