செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திற்கு மத்திய அரசு எப்போது அனுமதி கொடுத்தாலும் செயல்படுத்த தயார்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அரசின் கட்டமைப்பு முழு பலத்துடன் இருக்கிறது; கொரோனா 3 அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருகிறது; 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் 1299 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக ஆய்வுசெய்ய 13 பேர் மருத்துவ வல்லுனர்கள் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் அதுதொடர்பான அறிக்கையை முதல்வரிடம் கொடுக்க இருக்கிறது” என்று தெரிவித்தார். எந்தெந்த மாவட்டங்களுக்கு, இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறதோ அந்த இடங்களுக்கு தடுப்பூசி அனுப்பும் வேலையை செய்து வருகிறோம் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திற்கு மத்திய அரசு எப்போது அனுமதி கொடுத்தாலும், செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இல்லையெனில் மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

Related Stories: