கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காமல் மா விவசாயிகள் ஏமாற்றம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி என மாவட்டம் முழுவதும் சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்துள்ளனர். இதில், மல்கோவா, செந்தூரா, இமமாம்பசந்த், பெங்களூரா, மல்லிகா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும்  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், மா பூக்கள் பூக்கத் தொடங்கி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் காய்க்கத் தொடங்கும். மே, ஜூன் மாதங்களில் அறுவடை செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அறுவடையும், விற்பனையும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வாகன போக்குவரத்து, மாங்கூழ் தொழிற்சாலைகள் போதிய அளவில் இயங்காத காரணத்தால் உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், மா விவசாயிகள் அறுவடை செய்த மாங்காய்களை காவேரிப்பட்டணத்தில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கு கொண்டுவரத் துவங்கி உள்ளனர். ஆனாலும் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகம் வராத நிலையில் உள்ளூர் வியாபாரிகள் மல்கோவா 25 கிலோ கொண்ட ஒரு கூடையை, ₹1,400 முதல் ₹1,800 வரை ஏலம் எடுத்து உள்ளூரில் சில்லரையாக விற்பனை செய்கின்றனர். ஆனாலும் மற்ற ரகங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories: