சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வழக்கில் அப்பள்ளியின் நிர்வாக அதிகாரி பிரேமலதா, தாளாளர் ப்ரீத்தி ஆகியோரிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்துகொண்டனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது போல், அயனாவரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. அதைதொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆசிரியர் ஆனந்த் மீது மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் படி போலீசார் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.