சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கையின் போது எந்த தேர்வும் வைக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தார். அதில், பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் எந்த பாடப்பிரிவுக்கு அதிக அளவில் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒது க்கலாம். ஒரே பாடப் பிரிவுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் பத்தாம் வகுப்பு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்டு தேர்வு நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கொண்டு சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு நடத்த தேவையில்லை என்று பல தரப்பில் இருந்தும் கருத்துகள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்ததால், அந்த தேர்வு நடத்துவதை பள்ளிக் கல்வித்துறை ரத்து செய்துள்ளது.