உலக சுகாதார அமைப்பிடம் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை: பிரதமருக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக மாநிலங்களவை எம்பி பி.வில்சன் அனுப்பியுள்ள கடிதம்: இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள்  கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால், இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு இதுவரை அங்கீகரிக்கவில்லை. மேலும்,  பாரத் பயோடெக் நிறுவனம் அவசர பயன்பாட்டு பட்டியல் ஒப்புதலுக்கான முழுமையடைந்த ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் தரவில்லை என்று தெரியவருகிறது. கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளுடன்தான் ஒப்புதலுக்காக ஆவணங்களை தர முடியும். அதாவது 3ம் கட்ட பரிசோதனைக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசிகளை போடுபவர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கும் வெளிநாடு செல்ல அனுமதி கோரி பாரத் பயோடெக் விண்ணப்பித்ததா என்று தெரியவில்லை. கோவாக்சின் தடுப்பூசி போட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கு எந்த சிக்கலும் வரக்கூடாது. அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரமுகர்கள் பலரும் கோவாக்சின் தடுப்பூசியையே போட்டுள்ளதால் அவர்களுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வு தொடர்பான உரிய ஆவணங்களை தருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதுவரை கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களும் வெளிநாடு செல்லும் வகையில் உலக சுகாதார அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக  எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

Related Stories: