கர்நாடக கொரோனா தடுப்பு நிதிக்கு சன் டி.வி. குழுமம் ரூ.3 கோடி நிதி உதவி!: காவேரி கலாநிதிமாறன் காசோலையை வழங்கினார்..!!

பெங்களூரு: கர்நாடக மாநில கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு  சன் டி.வி. குழுமம் 3 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. பெங்களூருவில்  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து சன் டி.வி. இயக்குனர் காவேரி கலாநிதிமாறன், 3 கோடி ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். அப்போது சன் டி.வி. இயக்குனர்கள் முரசொலி செல்வம், விஜயகுமார் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர். நாட்டில் கொரோனா  வைரஸ் 2வது அலை உலுக்கி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்தியாவுக்கு  பல உலக நாடுகளும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. உள்நாட்டை சேர்ந்த தனி நபர்களும் நிறுவனங்களும் கூட உதவி செய்ய களம் இறங்கியுள்ளனர். கோவிட்-19 இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவும் வகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு 30 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சன் டி.வி. குழுமம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கர்நாடக கொரோனா தடுப்பு நிதிக்கு சன் டி.வி. குழுமம் சார்பாக 3 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சன் டி.வி. குழுமம் சார்பாக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: