அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை: ஓபிஎஸ் பங்கேற்கவில்லை

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, சேலத்தில் இருந்து நேற்று தான் சென்னை திரும்பினார். இன்று, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின் மற்றும் திநகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது, அதற்கு நன்றி சொல்வது மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதுவது உள்ளிட்ட விவகாரங்களில் இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியானது. அதற்கு முன்னர், இருவரது பெயரிலும் தான் அறிக்கை வெளியாகும். மேலும், சில நாட்களாக, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: