பாசி மணியில் பணம் பார்க்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

‘‘இந்த  உலகம் இருக்கின்ற வரை,  அதில் கலைப்பொருட்களும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் வித்தியாசமாக விதவிதமாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வரும்’’ என்று சொல்லும் ரமீஸா பேகம் பாசி மணியில் பலவித கலைப்ெபாருட்கள் தயாரிப்பதோடு பயிற்சியும் அளித்து வருகிறார். பாசி மணியில் கலைப்பொருட்கள் தயாரிப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை…

‘‘நான்  பிறந்து  வளர்ந்தது  எல்லாம்  சென்னையில்தான். எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது பள்ளி விடுமுறையில் வீட்டில் பாட்டியுடன் இருந்தேன். அந்தக் காலத்துப் பிள்ளைகளைப்போல சொப்பு சாமான்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். எனது வீட்டிற்கு எங்களது குடும்ப நண்பரான  கிரிஜா ரவீந்திரன் ஒருநாள் வந்தபோது, அவர் மணிகளைக் கொண்டு பலவித கலைப்பொருட்களை செய்வதைப் பார்த்தேன்.

அப்போது நாமும் ஏன் இவ்வாறு பொருட்களை செய்யக்கூடாது என எனக்கு இந்தக் கலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் டி.வியின் மீது யாருக்கும் அவ்வளவு கவனம் இருந்ததில்லை. எனக்கும் அப்படித்தான். அவரிடமிருந்து இந்தக் கலையை கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு பள்ளி விடுமுறையிலும் இதை நன்றாக செய்யப்பழகிக் கொண்டேன். அருகில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்களிடம் இதுபோல் பொம்மைகளை வாங்கி வந்து அதுபோலவே செய்வேன்.

பின்பு உயர்கல்வி, வேலை, திருமணம், பிள்ளைகள் என்று சிறிது காலம் இதனைச் செய்ய முடியாமல் போனது. பிள்ளைகள் வளர்ந்தபிறகு திரும்பவும் எனது கவனம் கலையின் மீது திரும்பியது. இதனையடுத்து பலவித பெயின்டிங், மேக்ரமி, க்ரோஷா, தையல் வேலைகள் போன்றவைகளையும் கற்றேன். ஆனாலும் பாசி மணி பொம்மையின் மீதான எனது ஈர்ப்பு குறையவில்லை.

நிறைய மணி பொம்மைகளைச் செய்து முகநூலில் விளம்பரம் செய்தேன். அதன்மூலம் நிறைய ஆர்டர்கள் வரத்துவங்கிஉள்ளது. இதனையடுத்து வீட்டில் வைத்து வகுப்புகளும் எடுக்கிறேன். ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறேன். தற்போது பள்ளி ஒன்றில் ஆர்ட் மற்றும் கிராஃப்ட் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். பள்ளி நேரம் போக வீட்டிலுள்ள வேலைகளை முடித்துவிட்டு பாசி மணிப் பொருட்களைச் செய்கிறேன். இந்த வேலைகளில் எனது கணவர் உறுதுணையாக இருந்து வருகிறார்.

இது ஓர் அற்புதமான கலை. இந்தக் கலையை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். முதலில் அடிப்படை மற்றும் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும், அதன் பின் நிறைய மாடல்களைச் செய்து பழக வேண்டும்.

வீட்டிலுள்ள மேஜை, நாற்காலி, ஃப்ரிட்ஜ், கட்டில், பீரோ, கேஸ் அடுப்பு, துளசி மாடம், குத்து விளக்கு, தையல் இயந்திரம் போன்ற நாம் பார்க்கும் மற்றும் நம் கற்பனையில் தோன்றும் பொருட்களை செய்யலாம். பாசி மணியைக் கொண்டு கடவுள் மாதிரிகளையும் செய்யலாம். விலங்குகள், பஸ், கார், சைக்கிள், குதிரை வண்டி, தேர் போன்ற எந்த ஒரு பொருட்களையும் மணியில் செய்யலாம்.

சிறிய பொருட்கள் என்றால் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து பொருட்கள்கூட செய்யலாம். நாம் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டே நம்  பொழுதுபோக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இன்றைக்கு திருமணம், புதிய வீடு கிரஹப்பிரவேசம் என்பது உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் இப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும், வீட்டில் அலங்காரப் பொருட்களாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள். எனவே, அக்கம்பக்கத்து வீடுகள், கடைகளில் நாம் மார்க்கெட்டிங் செய்தால் நம் திறமைக்கேற்றவாறு வருமானம்ஈட்டலாம்.

2 அல்லது 3 நம்பர் மணி மற்றும் தங்கூசி (வையர்) தேவை. பொருட்களின் அளவு, செய்யும் நேரம் பொறுத்து விலை நிர்ணயம் செய்யலாம். குறைந்தது ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இத்தொழிலை ஆரம்பிக்கலாம். இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் கிடைக்கின்றன.

பொருட்களை செய்து உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் முதலில் விற்பனை செய்யலாம். இணையத்திலும் பொருட்களை விளம்பரப்படுத்தலாம். கல்யாண சீர்வரிசை தட்டில்  இந்தக் கலைப்பொருட்கள் இடம் பெறுகின்றன. நவராத்திரி கொலு வைப்பவர்களும் இதை விரும்பி வாங்குகிறார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லியபடி ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற கூற்றின்படி இந்தக் கலையை கற்றுக்கொண்டால் கவலையில்லாமல் வாழலாம். அந்த காலத்தில் இக்கலை மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் இப்போது  இதை செய்பவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இக்கலை அழிந்து போகாமல் இருக்க இதனை ஆர்வமாக கற்க விரும்புபவர்களுக்கு இதனை கற்றுக்கொடுத்து வருகிறேன்’’ என்றார் ரமீஸா பேகம்.                    

தோ.திருத்துவராஜ்

Related Stories: