பொறியியல் மாணவர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய காலங்களை போலவே நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு..!!

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய காலங்களை போலவே நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றது. ஆன்லைன் முறையில் நடைபெற்ற தேர்வில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தோல்வி அடைந்ததாக கூறி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மீண்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். 

மீண்டும் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி முதல் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற தேர்வு மீண்டும் நேரடி எழுத்து தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களின் பட்டியலை வருகின்ற 7ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் நேரடி எழுத்து தேர்வே நடைபெறும் என்றும்  அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. 

Related Stories: