தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கலந்தாய்வு கூட்டம் தமிழகத்தில் தொழில் துறையை முதலிடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சென்னை: நாட்டில் தொழில் வளர்ச்சியில் 3வது இடத்தில் இருக்கும் தமிழக குறு - சிறு - நடுத்தர தொழில்கள் துறையை முதல் இடத்துக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்தியா தொழில் வர்த்தக சபைக் கூட்டத்தில் ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார். தமிழகத்தில் தொழில்துறையின் தேவைகளுக்ககான தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் கொள்கை பரிந்துரைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. தென்னிந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் அருண் வரவேற்றார். சுரனா & சுரனா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.வினோத் சுரனா தொடக்க உரையாற்றினார். தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறப்பு விருந்துனராக கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

தமிழகத்தில் விவாசாயத்திற்கு அடுத்தபடியாக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பொருளதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருகின்றது. இது தமிழகத்தில் அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய முக்கிய துறையாகும். இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கதுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மொத்தம் 23 லட்சத்து 60 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் ₹2 லட்சத்து 73 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு 1 கோடியே 52 லட்சம் பேருக்கு  வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு தமிழகம் 3வது மாநிலமாக திகழ்கிறது.

கொரோனா ஊரடங்கால்,பாதிக்கப்பட்டுள்ள குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டு எடுக்க அரசு ஒரு செயல் திட்டத்தை வகுக்க உள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்களை புனரமைத்தல், இழக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பை மீட்டு புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மின்னணு முறையை கடைபிடித்தல், ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி இத்துறையை முதன்மைத் துறையாக மாற்றி அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில்  பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் ஜோஷ் போல்கர், கல்பாத்தி நிதி நிறுவனங்களின் தலைவர் சுரேஷ் கல்பாத்தி ஸ்டேட்டர்ஜிக் கன்சல்டிங் தலைவர் சங்கர், மகேந்திரா தொழில் நிறுவனங்களின் வணிக தலைவர் வைபவ் மிட்டல், மேத்தா மருத்துவமனை துணை தலைவர் சமீர் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை துணை தலைவர் சிவசங்கர் நன்றி தெரிவித்தார்.

Related Stories: