திருவல்லிக்கேணி காஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பரபரப்பு டாக்டர் அறை ஏசியில் மின்கசிவால் தீ விபத்து

* 36 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

* விபத்தை நேரில் பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக மருத்துவமனை காணப்படும். இந்நிலையில், நேற்று இரவு பிரசவ வார்டில் உள்ள டாக்டர் அறையில் இருந்த ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. அப்போது, ஏசியில் பயங்கர சத்தத்துடன் கறும்புகை வெளியேறியது. உடனே அறையில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள், “தீ விபத்து ஏற்பட்டு விட்டது. பத்திரமாக அனைவரும் வெளியேறுங்கள்,” என கூச்சலிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசவித்த 36 பெண்கள் அலறி அடித்துக்கொண்டு தங்களது பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியில் ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள், தீயணைப்பு கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  

அதன்படி திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அங்கிருந்த தீயணைப்பு கருவியின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தினர். இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க மருத்துவமனையில் உள்ள மின்சாரத்தை துண்டித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே பிரசவ வார்டில் படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் பிரசவித்த பெண்களை ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் உறவினர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவனை கட்டிடத்திற்கு வெளியில் கொண்டு வந்தனர்.

அந்த வகையில் 36 குழந்தைகள் மற்றும் தாய்மார்களை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரசவ வார்டில் இருந்து கொண்டுவரப்பட்ட குழந்தைகள் அனைவரும் வேறு ஒரு வார்டுக்கு மாற்றப்பட்டனர். தகவறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தினர். அப்போது மின்அழுத்தம் காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்தவுடன், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு வந்து பிரசவித்த தாய்மார்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், விபத்து நடத்த வார்டிலும் ஆய்வு செய்தார்.

Related Stories: