இரட்டை இலை வழக்கில் திகார் சிறையில் இருக்கும் சுகேஷுக்கு பரோல் மறுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கு பரோல் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க தகுதிவாய்ந்த கைதிகளுக்கு 90 நாள் பரோல் வழங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் தமக்கு பரோல் வழங்கக் கோரி இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதில், டெல்லி அரசுக்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு வலியுறுத்த வேண்டும் என சுகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘சிறை கைதிகளை கொரோனா பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு பரோல் வழங்குவது குறித்து பரிசீலிக்க மாநில அரசு உயர்மட்ட குழு நியமித்துள்ளது. அதனால் முதலில் உங்களது கோரிக்கை மனு குறித்து உயர்நீதிமன்றம் எந்த மாதிரியான உத்தரவு பிறப்பிக்கிறது என்று பார்ப்போம். அதனால் நீங்கள் அங்கேயே சென்று முறையிடுங்கள்’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: