களியக்காவிளை: குமரி- கேரள எல்லையோர சாலைகள் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கேரளாவில் கடும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக டிரிபிள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரள பகுதிக்குள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக கேரள போலீசார் குமரி மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மண் கொட்டி அடைத்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களை கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைகின்றனர். கண்ணுமாமூடு ஜங்ஷனில் இருந்து மணிவிளை செல்லும் சாலையில் கேரள போலீசார் மண்கொட்டி உள்ளனர். இதனால் மணிவிளை மற்றும் சுற்றியுள்ள தமிழக கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. புலியூர்சாலை பகுதியில் அடைப்பு ஏற்படுத்தியுள்ளதால் மாங்கோடு, ஐந்துளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.