சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற குழு நாளை ஆலோசனையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களிடம் பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் 13 கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.