சென்னை: தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 1 கோடி நிதி வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் அழைப்பின் பேரில் நேற்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் பணிக்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது சொந்த தொகையில் இருந்து ₹1 கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இதையடுத்து கொரோனா 2வது அலையை எதிர்கொள்ளவும், மனித உயிர்களை காப்பாற்றவும் மிகப்பெரிய அளவிலான ஏற்பாடுகள், நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தோள் கொடுக்கும் வகையில் கவர்னர் 1 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.