சென்னை: லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 மிமீ அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்த மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இதன் தொடர்ச்சியாக அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி புயலாக மாறும் பட்சத்தில் அந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் 17ம் தேதி அன்று குஜராத்தில் கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் வடக்கு நோக்கி செல்லும் போது கரையை அரபிக் கடலின் கிழக்கு கரையை ஒட்டிய படியே நகர்ந்து செல்லும். அதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் வரை உள்ள பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கும். அத்துடன் தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்யும். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டஙகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
இதுதவிர, நாளையும் நாளை மறுநாளும்(16 மற்றும் 17ம் தேதி) 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலஇடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். அரபிக் கடலில் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளதால் தென் கிழக்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா, கடலோரப்பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 80 கிமீ வேகத்திலும் இடையிடையே 90 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.