அரபிக் கடல் பகுதியில் புயல் சின்னம்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை

சென்னை: அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது தற்போது புயலாக வலுப்பெற்று வருகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இன்று, இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை  முதல் மிக கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் நாளை(15ம் தேதி)ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். இதே நிலை 17ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதே போல தென் மேற்கு அரபிக் கடல்பகுதியிலும் சூறைக்காற்று வீசும். அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

Related Stories: