சென்னை: கொரோனா நிவாரண உதவித் தொகையின் முதல் தவணை ₹2,000யை வரும் ஞாயிற்றுக்கிழமையும் (மே 16ம் தேதி) பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெறுந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் 4153.39 கோடி செலவில் மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2000 நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2,000 ரொக்கம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.