கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி: கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்கிழமை மல்யுத்த வீரர் சாகர் தான்கட்டை அவரின் வீட்டிலிருந்து மல்யுத்த வீரர் சுஷில் குமார், அவரின் நண்பர்கள் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து சாகர் தன்கட்டைக் கடுமையாகத் தாக்கிவிட்டு சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர். மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசிடம் சாகர் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாகர் உயிரிழந்ததையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் அவரின் நண்பர்கள் மீது போலீஸார் ஆயுதத் தடுப்புச் சட்டம், ஐபிசி பிரிவு 302, 365, 120பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் சுஷில் குமார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

Related Stories: