அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் நிவாரண தொகை வழங்க உத்தரவு: 4153.39 கோடி செலவு ஏற்படும்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மாதம் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை முதல் தவணையாக  வழங்க அரசு ஆணையிடுகிறது. இதற்கு ரூ.4153.39 கோடி செலவு ஏற்படும். இதுகுறித்து பொது விநியோகத்திட்டத்துறையின் செயலாளர் தயானந்த் கட்டாரியா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

தேர்தல் அறிக்கையில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் திரும்பி உள்ள நிலையில், கட்டுப்பாடுகளும் மக்களின் துயரங்களும் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவரத்து, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கலைஞர் பிறந்த நாள் முதல் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார்கள்.

தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் கடந்த 6ம் தேதி காலை 4 மணி முதல் வருகிற 20ம் தேதி காலை 4 மணி வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் காரணமாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாகவும் பொதுமக்களின் இயல்பு நிலை வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளது. இந்த மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை முதல் தவணையாக வழங்கினால் அரசுக்கு ரூ.4153.39 கோடி செலவு ஏற்படும்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை முதல் தவணையாக வழங்க அரசு ஆணையிடுகிறது. பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டதற்கான பயனீட்டு சான்றிதழை நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் பெற்று அரசுக்கு சமர்ப்பிக்குமாறு உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: