கொரோனா காலத்திலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று  சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பி.எஸ்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மிக பெரிய வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்று இருக்கும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவருக்கும் சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பொதுமக்களின் குடிநீர் தேவையை நல்ல முறையில் செய்து கொடுத்து அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு கொரோனா மிகவும் அதிகமாக இருந்தபோது நாங்கள் தன்னலம் பாராமல் சென்னை நகரங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்து கொடுத்தோம் மற்றும் 2017-19 கடுமையான வறட்சி காலத்தில் நாங்கள் குறைந்த வாடகைக்கு வண்டிகளை இயக்கி வந்தோம். அதுசமயம் அப்போது இருந்த ஆட்சியாளர்களிடம் பல முறை நேரிலும் கடிதம் மூலமும் எங்களுக்கு ஊக்கத்தொகை கேட்டு போராடியும் ஏமாற்றமே மிஞ்சியது. மக்களின் தினசரி அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.நடந்து முடிந்த டெண்டரில் புதிய லாரிகள் அதிகம் வந்த காரணத்தால் வறட்சி காலத்திலும் கொரோனா அதிகம் பரவிவந்த சூழ்நிலையிலும் தன்னலம் கருதாது பாடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் பணி ஆணை கிடைக்காது மிகவும் துயரமான நிலையில் உள்ளனர் அவர்கள் வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்து அவர்கள் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய உதவுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: