களநிலவரத்தை மறைக்காமல் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 25,000-ஆக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிகரிக்கும் நோய்த் தொற்றுக்கு ஏற்ப படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை.

நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே மருத்துவத்துறையின் மீதான சுமை குறையும். கொரோனா உயிரிழப்புகளை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் அயராது உழைத்து வருகிறார்கள். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. களநிலவரத்தை மறைக்காமல் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டிசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: