சென்னை: கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவுகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டாவது அலையில் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆக்சிஜன் தட்டுப்பாடு. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், பல்வேறு தனியார் அமைப்புகள், மருத்துவமனைகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளன. அதேபோல் இங்கிலாந்து, மலேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சரக்கு விமானங்களில் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் முதல் வர தொடங்கியுள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகலில் வந்த ஒரு சரக்கு விமானத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 கருவிகள் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்தன. இதேபோல் நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு சரக்கு விமானத்தில் இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து 38 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் தமிழகத்தில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு வந்தன.