போலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2010ம் ஆண்டு விலங்கியல் பிரிவில் இணை பேராசிரியராக பணியில் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் மூன்று கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற்றதாக போலி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் வகையில், பல்கலைக்கழக பதிவாளர், குற்றக் குறிப்பாணையை (சார்ஜ் மெமோ) பிறப்பித்தார்.   இதை பிறப்பிக்க பதிவாளருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரர் அளித்தது போலிச் சான்றிதழா இல்லையா என்பது விசாரணைக்குப் பிறகே நிரூபிக்கப்படும் எனக் கூறி இணை பேராசிரியரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 மேலும், இதுசம்பந்தமான விசாரணையை தினந்தோறும் நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.  இந்திய சமுதாயம் ஆசிரியரை தெய்வமாக கருதுவதால், போலி சான்று அளித்து பணியில் சேர்ந்தவருக்கு எந்த கருணையும் காட்ட முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: