அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை: அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 105 ஏக்கர் அரசு நிலத்தை, தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூன் 10ம்  தேதிக்குள் இதுகுறித்து ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வக்கீல் பிரவீன்குமார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  செங்கல்பட்டு அருகில்  கருங்குழிபள்ளம் எனும் கிராமத்தில் உள்ள 105 ஏக்கர் அரசு நிலம் 53 தனி நபர்களுக்கு பட்டா போட்டு  வழங்கப்பட்டுள்ளது.  இந்த நில அபகரிப்பு குறித்து டிஜிபியிடம் புகார் அளித்த போது, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படாமல் திருப்போரூர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

 தனது புகாரின் அடிப்படையில் காவல் துறை உரிய பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். நில அபகரிப்பு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்  எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தவறாக வழங்கப்பட்ட இந்த பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, 105 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு தவறுதலாக பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையை தொடங்க  வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: