பாணாவரம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக நெல் மூட்டைகள் தேக்கம்-விரைவான விற்பனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

பாணாவரம் : மகேந்திரவாடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குப்புகல்மேடு, வெளிதாங்கிபுரம், மோட்டூர், பாலகிருஷ்ணாபுரம், சிறு வளையம், கர்ணாவூர், கல்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இங்குள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி முதல் சம்பா பருவ நெல் மணிகளை அறுவடை செய்து மூட்டைகளாக டிராக்டரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக தினமும் கொண்டு வந்து இரவும், பகலும் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.

மேலும், நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனாலும் மந்த நிலையில் தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், விவசாயிகள் மேலும் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகள் கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யப்படாததால், ஆங்காங்கே தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக திடீரென அவ்வப்போது பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் சன்ன ரக நெல் மட்டும் ₹19.58 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து கடந்த ஒரு மாதமாக காத்திருக்கிறோம் இதுவரை எங்கள் நெல் மூட்டைகள் எடை போடவில்லை.

 ஒரு நாளைக்கு,  300, 400 முட்டைகள் எடை போடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக ஒரு மூட்டை கூட எடை போடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகள் கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யப்படாமல் காத்திருப்பதால்  பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: