நித்திரவிளை: ஆழ்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதிய சம்பவத்தில் மூழ்கியதாக கூறப்பட்ட 11 மீனவர்கள் கரைக்கு வந்து கொண்டிருப்பதாக படகின் உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளையை சேர்ந்தவர் ஜோசப் பிராங்க்ளின் (46). இவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் வள்ளவிளையை சார்ந்த ஜாண்(20), சுரேஷ்(44) உள்ளிட்ட 11 பேர் கடந்த 9ம் தேதி இரவு தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களின் படகு 23ம் தேதி மாயமானது. அதன்பிறகு கடந்த 24ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டு கரைக்கு வந்து கொண்டிருந்த வள்ளவிளையை சார்ந்த பெரியநாயகி என்ற விசைப்படகில் வந்த டெனிஸ்டன் என்பவர் மெர்சிடிஸ் என்ற விசைப்படகு கர்நாடகா மாநிலம் கார்வா துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மூழ்கி காணப்படுவதாகவும், அதில் இருந்த மீனவர்களை காணவில்லை என்றும் வள்ளவிளைக்கு தகவல் கொடுத்தார். இதனால் வள்ளவிளை மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியது.