நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 10 வீடுகள் சேதமடைந்தது. தவிர வாழை மரங்களும் முறிந்து நாசமானது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே சாரல் மழை பெய்தது. பின்னர் சுமார் 6 மணியளவில் இருந்து இரவு 10மணி வரை சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதில் கார்கூடல்பட்டியில் 2 வீடுகள், பிலிப்பாகுட்டையில் 4 வீடுகள், ஒண்டிக்கடையில் 2 வீடுகள், முள்ளுக்குறிச்சியில் 2 வீடுகள் என மொத்தம் 10 வீடுகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு, சுவர்கள் உள்ளிட்டவைகள் இடிந்து சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.