ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த மூதாட்டி உடலை கையால் தூக்கிய உறவினர்கள்: சமூக வலைத்தளத்தில் வைரல்

ஆம்பூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த மூதாட்டி சடலத்தை உறவினர் பாதுகாப்பு கவசமின்றி  வெறுங்கையால் எடுத்து சென்றுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஜலால்பேட்டையை சேர்ந்த 69 வயது மூதாட்டி. இவர் கடந்த சில நாட்களூக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக  சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து. சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரொனாவால் மூதாட்டி உயிரிழந்ததை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் நீண்டிநேரம் வார்டிலேயே வைத்துள்ளனர். நீண்ட நேரத்துக்கு பின்னர், மூதாட்டி சடலத்தை அரசு மருத்துவமனை ஊழியர் கவச உடை, கையுறை அணிந்து வந்து பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்து செல்ல வந்தார். அப்போது, அங்கிருந்த உறவினரிடம் என்னால் மட்டும் தூக்கிவைத்து எடுத்து செல்ல முடியாது. நீங்கள் வந்துதான் உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூதாட்டியின் உறவினர் கையுறையும், கவச உடையும் இன்றி சடலத்தை தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்து ஊழியருடன் எடுத்து சென்றார். கொரோனா நோய் தடுப்பு விதியை பின்பற்றாமல் வெற்று கைகளில் வெறும் முக கவசம் மட்டும் அணிந்து உறவினர்தள்ளி சென்ற படங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: