புதுடெல்லி: கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை நினைவுபடுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 3.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், உலகளவில் தினமும் இந்தியா புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாட்டில் கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, லட்சங்களில் உயர்ந்து வருகிறது.மரண ஓலம் காதைக் கிழிக்கிறது.இறந்தால் கூட நிம்மதியாக புதைக்கவோ, எரிக்கவோ இடுகாடுகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் ஒரே இடத்தில் பல பிணங்களை எரித்த புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பிணங்கள் மீது எரியும் நெருப்பால் இந்தியா ஒளிர்கிறது என பலரும் விமர்சித்திருந்தனர்.