கன்னியாகுமரி கடற்கரைக்கு தடையை மீறி வந்த சுற்றுலா பயணிகள்-போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்

கன்னியாகுமரி :சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று காலை தடையை மீறி சுற்றுலா  பயணிகள் குவிந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.சீசன் காலம் என்று இல்லாமல் தினசரி சர்வதேச  சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பொது மக்களின் நடமாட்டத்தை பார்க்க  முடியும். குறிப்பாக திரிவேணி சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள்  குடும்பமாக ஆனந்த குளியல் போட்டு குதுகலம் அடைவது வழக்கம். இந்த நிலையில்  கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சுற்றுலாத்  தலங்களுக்கு பொது மக்கள் செல்ல கடந்த 20ம் தேதி முதல் தடை விதித்துள்ளது.

இதையடுத்து  கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு தள  அலுவலகம், கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.  தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் போலீசார்  பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 நாளாக சுற்றுலா பயணிகளின் கூட்டம்  இல்லாமல் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தடையையும் மீறி கன்னியாகுமரியில் ஏராளமான ெசாகுசு கார்கள்,  வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை பார்க்க முடிந்தது. வெறிச்சோடி கிடந்த  கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்தையும் காண முடிந்தது. சர்வ  சாதாரணமாக சூரிய உதயத்தையும் அவர்கள் கண்டு ரசித்தபடி இருந்தனர். கடற்கரை  பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததே இதற்கு காரணம் ஆகும்.

இந்த  நிலையில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள்  நடமாடுகிற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே பகவதியம்மன் கோயில் முன்பு  பாதுகாப்பு பணியில்  இருந்த ேபாலீசார் கடற்கரை பகுதிக்கு விரைந்து வந்தனர்.  தொடர்ந்து அந்த பகுதியில் ஜாலியாக உலாவி கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை  எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் திரிவேணி சங்கமம் கடற்கரை  பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிரந்தர பாதுகாப்பு

கன்னியாகுமரி  ரவுண்டானா சந்திப்பில் வழக்கமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது  வழக்கம். ஆனால் நேற்று காலை அந்த பகுதியில் போலீசார் யாரும் இல்லை. இதை  பயன்டுத்தி சுற்றுலா பயணிகள் சுலபமாக கடற்கரை பகுதிக்கு சென்று விட்டனர்.  ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியும் வரை கன்னியாகுமரி ரவுண்டானாவில் போலீசாரை  நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: