நிரம்பி வழியும் படுக்கைகள்!: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வாசலில் அமரவைத்து கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை..!!

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு வெளியில் அமரவைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு என்பது அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாளில் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 30,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் பாதிப்பு என்பதும் கணிசமாக உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த 16ம் தேதி 2,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கும் நிலை எட்டியுள்ளது. சென்னையில் மொத்தமாக 30,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் கொரோனா தொற்றுக்கு 4,474 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் அனைத்து மருத்துவமனைகளும் நிரப்பி வழிகின்றன. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள 900 படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் புதிதாக வரக்கூடிய நோயாளிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று பாதிப்புக்குள்ளாகி மூச்சுத்திணறும் நோயாளிகளுக்கு வெளியில் அமர்ந்தபடியே ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீவிர தொற்றுடன் வரும் நோயாளிகளுக்கு வாசலிலேயே முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதே நிலைதான் பல மருத்துவமனைகளில் நீடித்து வருகிறது. அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை படுக்கைகள் நிரம்பிவிட்டன.

Related Stories: