தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 26ம் தேதி வரை இயல்பைவிட கூடுதலாக 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும். 11 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்பச்சலனம் அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம் அதை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிமீ உயரம் வரை வளி மண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் 40 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருவதால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை  உள்ளதால் காற்றின் இயல்பான வெப்ப நிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இதனால் இன்று பிற்பகல் முதல் மறுநாள் காலை வரை வெப்பமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். சென்னையிலும் இயல்பைவிட அதிகமாக 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.

Related Stories: