சென்னை: கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை திமுக நிர்வாகியான சூலூர் ஏ.ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்னை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழியாக புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும். நீரழிவு பிரச்னை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாமென பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரயில் பயணத்தின்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் தன்னைப்பற்றி முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அவதூறாக பேசுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அவதூறாக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும். இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.