சென்னை: நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்சார் போர்டு (திரைப்பட தணிக்கை வாரியம்) பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்ததாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பது, காரில் ஏற அறுகதை இல்லை என்று காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.