தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.384 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.35,624க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமையை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் அதிர்ச்சி தான் காத்திருந்தது. கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,495க்கும், சவரனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,960க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் பவுன் 36 ஆயிரத்தை நெருங்கி வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.4,450க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.35,600க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.48 குறைந்து ஒரு கிராம் ரூ.4447க்கும், சவரனுக்கு 384 குறைந்து ஒரு சவரன் ரூ.35,576க்கும் விற்கப்பட்டது. நகை விலை திடீர் குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: