தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்: இரவு நேர ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவி வரும் மற்ற மாநிலங்களில் இரவு மற்றும்  வார இறுதிநாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும்போதிலும் அந்தமாதிரியான நடவடிக்கைகள் எதும் இதுவரை அறிவிக்கப்பட்டவில்லை. இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் ஊரடங்கை செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

எனினும் அந்த கூட்டத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து சென்னை வருகிறார். தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: