சென்னை: கொரோனா அச்சத்தால் நீண்ட தூரம் செல்லும் பேருந்து சேவையை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், நீண்ட தூர பேருந்து சேவை இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இனி வரும் நாட்களில் பாதிப்பு இரட்டிப்பாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் நீண்ட தூரம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளின் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரையில் இருந்து செல்லும் 60 சதவீதம் பேருந்துகள் வெறிச்சோடிய நிலையிலேயே வெளியூர்களுக்கு சென்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.