சென்னை: தமிழகத்தின் ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதில் சிப்பிப்பாறை நாய் வேகமாக ஓடுவதிலும் அதிக வலுவுள்ள வகையை சேர்ந்தது. மோப்ப சக்தியும் இதற்கு அதிகம். இது ஒரு நடுத்தர நாய், இவை 25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ உயரம் கொண்டவை. சமீபத்திய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ உயரம் உடையவையாக உள்ளன. இந்த நாய்களை தற்போது வனத்துறையினர் காடுகளில் நடைபெற்று வரும் வனக் குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வனத்துறை பயிற்சி கல்லூரியில் வளவன், கடுவன், கலிங்கன், ஆதவை என்ற 4 சிப்பிப்பாறை இன நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்கள் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள காடுகளில் வரும் ஜூன் முதல் பணியில் அமர்த்தப்படவுள்ளன. காடுகளில் உள்ள விலங்குகளுக்கு எதிரான குற்றங்களை கண்டறிய இந்த சிப்பிப்பாறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன.