தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்கள் குறிப்பிட்ட துறையில் நிபுணர்களாக இருக்க வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து

சென்னை:  தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  விதிகளின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 3 ஆண்டுகள் ஆறு மாதங்கள் மட்டுமே அனுபவம் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு போதிய  நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே மத்திய அரசு தீர்ப்பாயங்களை உருவாக்கியது.

நிபுணராக இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணராக இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.  அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் என்று குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கூறி  விசாரணையை திங்கள்கிழமைக்கு  தள்ளிவைத்தனர்.

Related Stories: