கொரோனா பரவல் இரண்டாவது அலை எதிரொலி: மாமல்லபுரம் சுற்றுலாத்தல புராதன சின்னங்களை பூட்டி சீல் வைப்பு...தொல்லியல் துறை நடவடிக்கை

 மாமல்லபுரம்: கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் பொருட்டு,  மாமல்லபுரம் சுற்றுலாத்தல புராதன சின்னங்கள் தொல்லியல் துறை சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம்,  ஸ்ரீதலசயன பெருமாள் கோயில், புலிக்குகை உள்ளிட்ட முக்கிய பல்வேறு சிறப்புகள் உள்ளன. இதனை காண்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து கண்டு ரசித்து  புகைப்படம் எடுத்து செல்வது  வழக்கம்.

இதனால் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்ட், தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும். மேலும், சாலையோர வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சங்கு மணி விற்பவர்கள், ஆட்டோ  ஓட்டுனர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோருக்கும் பயனடைந்து வந்தனர். கொரோனா நோய்த்தொற்று பலவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து பயணிகளின் வருவை வெகுவாக குறைந்தது. பின்னர், கடந்த சில  மாதங்களாக ஊரங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருவதால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு  முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மாமல்லபுரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய தொல்லியல் துறை,  இன்று முதல், மே 15ம் தேதி  வரை சுற்றுலாத்தலங்களை மூட உத்தரவிட்டது.  இதையடுத்து மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரிகள் புராதன சின்னங்கள் உள்ள பகுதியை பூட்டி சீல் வைத்தனர். இதனால், இனிமேல் பார்வையாளர்கள் வெளியில் நின்று மட்டுமே புராதன சின்னங்களை கண்டு ரசிக்க முடியும்.

Related Stories: