தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தமிழக டிஜிபி திரிபாதிக்கு கொரோனா? முதல்வர் பாதுகாப்பு பிரிவு எஸ்பிக்கும் தொற்று

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதிக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு தொற்று இல்லை என்று டிஜிபி அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கிடையே தமிழக காவல் துறை டிஜிபி கடந்த வாரம் தேர்தல் பணி தொடர்பாக டெல்லி சென்று இருந்தார். அதை தொடர்ந்து டிஜிபி திரிபாதி தமிழகம் திரும்பினார். தமிழக தேர்தலுக்கு பிறகு நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு டிஜிபி திரிபாதி புறப்பட்டார்.

அப்போது அவருக்கு உடல் வலி, அழற்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். அதன் பிறகு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள ஜெயந்த் முரளி, முதல்வர் தலைமையில், தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதிக்கு பதில் கலந்து கொண்டார். பின்னர் கொரோனா தொற்றாக இருக்கலாமோ என்ற அச்சம் காரணமாக அவர், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இல்லையென்று உறுதியானது. அதேபோல், முதல்வர் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் ராஜாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.

Related Stories: